க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

வணக்கம் நேயர்களே!
இது உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை... 0.08 பண்பலையூடாக உங்கள் செவிப்பலைகளை உங்கள் சராங் புராங் வானொலிச் சேவை இன்றும் உங்களை வதைக்க மன்னிக்கவும் இன்றும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வந்திருக்கிறது.
இதோ எமது நிலையக்குறியீட்டு இசை...
'கேட்டுப் பாரு சராங் புராங்...
எதிரிங்க சாரமெல்லாம் பிய்யுது...
வெற்றிதாண்டா நமக்கு...
டண்டணக்கா... ஆ... டணக்குணக்கா...'

ஆம்...
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க ஒரு குறட்பா...
'நல்லன செய்வார்க்கு மறக்காமல் இரண்டு
அடி கொடுப்பது நலம்'

ஆம்... அந்த அருமையான குறட்பாவைத் தொடர்ந்து ஒரு விசேட நிகழ்ச்சி ஒலிபரப்பாகவிருக்கிறது... 'கம்பஸ்ஸில் இன்று...' என்ற நிகழ்ச்சியோடு யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து செத்தலிங்கம் சாகாதேவன்...
வணக்கம் சாகாதேவன்...

ஆம்... வணக்கம் சொறிறாஜ்...
இது செத்தலிங்கம் சாகாதேவன்... யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து இன்றைய மட்டை வழங்கும் விழா பற்றிய சில சுவாரசியமான தகவல்களை வழங்க தயாராக இருக்கிறோம்.

பல்கலைக்கழக வாசலில் வாழைமரங்களும், காய் வாழைக்குலைகளும், கறுத்த நிறக் கொடிகளும், பறை மேள சத்தங்களும் மட்டை பெற வருவோரை மகிழ்ச்சியாக வரவேற்கின்றன...
மட்டைகளை வாங்குவதற்காக மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டிகளிலும் பலர் அவிழ்த்து விட்ட ஆட்டுப்பட்டி போல வந்திருக்கிறார்கள்.
ஆண்கள் பலரின் உடைகளில் ஆங்காங்கே துவாரங்களும், பிய்ந்த அடையாளங்களும் காணப்படுகின்றன...
பெண்கள் சிலர் பல்கலைக்கழகத்தை கூட்டும் வேலையை இலகுவாக செய்யும் பொருட்டு சேலைகளை நிலத்தை கூட்டும் விதமாக அணிந்து வந்திருக்கிறார்கள்... ஆனால் பலரின் உடல்களில் ஆடைகளை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது... ஒரு வேளை யாழ்ப்பாணத்தில் ஆடைகளின் விலை அதிகரித்து விட்டதோ என்னவோ...

அங்கே ஒரு முதியவர் அவசரம் அவசரமாக உள்ளே போகிறார்... அவர் ஓர் மாணவனுடன் ஏதோ கதைக்கிறார்...
என்ன கதைக்கிறார் என கேட்கலாம்... எனது ஒலிவாங்கியை அவர்களை நோக்கிப் பிடிக்கிறேன்...

முதியவர்: அடேயப்பா தம்பி! உங்க என்னடா நடக்கப்போகுது...
மாணவன்: பட்டம் குடுக்கப் போயினம் அப்பு.
மு: உதில நிக்கிற எல்லாருக்குமோடா...?
மா: ஓமணை அப்ப...
மு: சரி... சரி... அப்ப என்ன பட்டம் குடுக்கப் போயினம்... எட்டு மூலைப்பட்டமோ? பிராந்துப் பட்டமோ?
மா: உதில நிண்டு விசர்க்கத கதையாம அங்கால போண அப்பு வெளியால...
மு: நான் போறன்... ஆனா நீங்கள் கஷ்ரப்படப் போறியள்.. ஆயிரக்கணக்கில நிக்கிறியள். எல்லாற்ற பட்டமும்     ஒண்டுக்க ஒண்டுக்க செருகப்போகுது... எனக்கென்ன... நான் போயிற்று வாறன்...

ஆம்... அப்பு சென்று விட்டார்...
இப்போது நாம் உள்ளே செல்வோம்...
ஆம்... அங்கே ஒரு மாணவனுக்கு அரிவாள், வீச்சுவாள், குறடு எல்லாம் குடுபடுது... ஆம்... அவர் சத்திரசிகிச்சையில் கலாநிதிப்பட்டம் பெற்றவராம்...
அங்கே ஒருவருக்கு சீமெந்துப் பைக்கற்றுகளும், நீர் மட்டமும், சாந்துப் பலகையும் கொடுக்கப்படுகிறது... அவர் கட்டிடத் துறையில் பட்டம் பெற்றவராம்...

இத்தோடு காலை அமர்வுகள் நிறைவுபெற்றதால் மாலை அமர்வில் சந்திப்போம்...
நன்றி நேயர்களே...

நன்றி சாகாதேவன்...
நேரம் இப்போது காலை 11.55...
'இந்த நேர அறிக்கையை உங்களுக்கு வழங்கியது கந்தசாமி வீச்சருவாள் தனியார் நிறுவனம்.'
சரி நேயர்களே...
விளம்பர இடைவேளையின் பின்னர் சந்திப்போம்...

'சிறந்த சிகை அலங்கரிப்புக்கு நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் சனத் ஜெயசூரியா லோன்றி... உங்கள் தலைமயிரை சிறப்பாக அலங்கரிக்க இலக்கம் 00, சுடலையடி, கொழும்புத்துறை மேற்கு, கொழும்பு 48 இல் இருக்கவே இருக்கிறது சனத் ஜெயசூரியா லோன்றி...'

நேரம் இப்போது 12 மணி...
எமது அடுத்த நிகழ்ச்சி 'அறிவுலகம்' இளைஞர் நிகழ்ச்சி...
புதிய நிகழ்ச்சியோடு கலையகத்தில் வெள்ளையன் கறுவற்தம்பி...
மீண்டும் வேறொரு நிகழ்ச்சியோடு உங்களை சந்திக்கிறேன்... நன்றி நேயர்களே...

நன்றி சொறிறாஜ்...
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் ஓர் விசேட சந்திப்பு...
10 முறை ஓ.எல் எடுத்து சித்தியடையாத திருவாளர் அறிவழகன் அவர்களின் பேட்டி...
வணக்கம் அறிவழகன் அவர்களே...
அறிவழகன்: வணக்கம்...
கறுவற்தம்பி: உங்களைப்பற்றி சில வார்த்தைகள் கூறுங்களே...

அறி: எனது பெயர் தான் தெரியுமே... பிறந்தது பெரியாஸ்பத்திரியில்... வளர்ந்தது வீட்டில... இப்ப இருக்கிறது             வானொலி நிலையத்தில...
கறு: ஆகா... அருமை...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல ஆக்களின்ர வாழத்துக்களால தான் நாங்க அறிவாளியா இருக்க முடியுது...
கறு: நன்றி... நீங்கள் எப்ப முதல் முதலா ஓ.எல் எடுத்தனீங்கள்?
அறி: உதெல்லாம் நினைவிருந்தா நான் எப்பவோ சோதின பாஸ் பண்ணியிருப்பனே...
கறு: மிக்க நன்றி...
அறி: நன்றி... நன்றி... உங்களப் போல...
    (இடைமறித்து)
கறு: சரி... சரி... உங்கட கணக்கு வாத்தியார் பற்றி சொல்லுங்களன்...

அறி: அந்தாளுக்கு ஒண்டும் விளங்காது... எப்ப கேட்டாலும் ஒரே விடைய தான் சொல்லும்... 5 உம் 3 உம் எப்பயும்     8 தானெண்டு தான் சொல்லும்... தமிழாக்கள் ஒண்டும் கண்டுபிடிக்கிறதில்ல எண்டுறாங்கள்... 5 உம் 3 உம் 9      எண்டு நான் புதுசா கண்டுபிடிச்சன், ஆனா பிழை எண்டுறாங்கள்... சரி அது தான் முடிஞ்சது எண்டா... 89          உக்குப் பிறகு என்ன எண்டார் தொண்பது எண்டன்... பிழையாம், புதுசா கண்டுபிடிக்கிறியா எண்டு அந்த           மனுசன் அடிக்குது... கண்டு பிடிக்காட்டி கண்டுபிடிக்கேல கண்டுபிடிக்கேல எண்டுறாங்கள்... கண்டுபிடிச்சா           அடிக்கிறாங்கள்...
     என்ன கொடும ஷரவணா இது...
கறு: கூல்... கூல்...
அறி: நான் சந்திரமுகி டயலொக் சொன்னா என்ன நீர் சிவாஜி டயலொக்க சொல்றீர்? பெரிய அறிவாளியெண்ட             நினைப்போ...
கறு: ஐயோ... நான் அப்பிடி சொல்லேல... உங்கள அமைதியா இருக்கச் சொல்லி இங்கிலீசில சொன்னனான்...
அறி: நானும் தமிழ், நீரும் தமிழ்... கேக்கிறவங்களும் தமிழ்... இடைக்குள்ள என்னத்துக்கு உங்கட இங்கிலீசு???       அதான் இடைக்குள்ள ஆங்கிலம்... எனக்கு உம்ம விட நல்லா ஆங்கிலம் தெரியும்... ஆனா அப்பிடி காட்டிக்       கொள்றதில்ல...
கறு: ஐயா! மன்னிக்கவும்... அது சரி... உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா...
அறி: தெரியுமாவா... 'தாமோதிரம்பிள்ளை ஆடி ஆடி வாறார்...' எண்டத ஆங்கிலத்தில சொல்லும் பாப்பம்...
கறு: அது... அது...
அறி: நாட்டில நுனி நாக்கில ஆங்கிலம் கதைக்கிறவயின்ர உண்மை நிலை இது தான்...
     நான் சொல்றன் கேளும்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்...
கறு: ஐயா... விளங்கேல... விளங்கப்படுத்த முடியுமா...
அறி: அப்பிடி கேக்குறது...
     கிவ் எண்டா தா, றிங் எண்டா மோதிரம், சைல்ட் எண்டா பிள்ளை, யூலை எண்டா ஆடி, கம்மிங் எண்டா      வாறார்... கிவ் றிங் சைல்ட் யூலை யூலை கம்மிங்... அப்ப விளங்குதே...
கறு: சுத்தம்...
அறி: என்னது...
கறு: சுத்தமான ஆங்கிலம் எண்டன்...
     சரி... இறுதியா ஒரு கேள்வி...
     நீங்கள் ஓ.எல் பாஸ் பண்ணாதத எண்ணி கவலைப் பட்டதுண்டா?
அறி: சீ... நான் உதைப்பற்றி கவலைப்படேல... ஓ.எல் பாஸ் பண்ணினா ஏ.எல் படிக்கோணும்... ஏ.எல் சோதினை      எடுக்கோணும்... கம்பஸ்ஸில படிக்கோணும்... கம்பஸ்ஸில சோதினை எடுக்கோணும்... ஓய்வே இல்லாம      போயிடும்... இப்ப பாருங்கோ நான் எவ்வளவு ஓய்வா இருக்கிறன்...
     அதோட ஒரு விஷயம் சொல்லுவினம் தெரியுமா...
     நாங்க எவ்வளவு கூட கூட படிக்கிறமோ, அந்தளவுக்கு மறக்கிறம்...
     ஆகவே படிக்காம விட்டா பிரச்சினை இல்ல தானே...
கறு: ஆகா... அருமை... மிக்க நன்றி...  உங்கள் போன்றவர்களின் வாழ்க்கையை எமது சந்ததி பாடமாய்      கேட்கோணும் என்று தான் இதை ஒழுங்கு செய்தோம்... உங்கள் வாழ்க்கையை நமது இளைஞர்கள் பாடமாக      எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்... மிக்க நன்றி...
அறி: மிக்க நன்றி...


ஆம்... அறிவுலகத்தில் அடுத்ததாக புதிர்ப்போட்டி...

10 முட்டைகளின் விடை 7 எனின் பாதி முட்டையின் விலை யாது...
இந்த வினாவிற்கான விடையை தெரிந்தோர் எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டிய இலக்கம் 123456789.
உங்கள் விடைகளை அனுப்பி பெறுமதிமிக்க பரிசுகளை பெறுங்கள்...

அடுத்து ஓர் விளம்பரம்...

உங்கள் கடைசி காலத்தில் இருப்பவரா நீங்கள்... நீங்கள் மேலுலகம் செல்ல பயன்படுத்த வேண்டிய ஒரே சவப்பெட்டி சொர்க்கம் சவப்பெட்டிகள்... நீங்கள் உடனே நாடி உங்கள் சவப்பெட்டியை முன்பதிவு செய்யுங்கள்...

ஆம் நன்றி நேயர்களே...
எமது ஒலிபரப்பு மீண்டும் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும்...
அதுவரை நிம்மதியாக இருக்க எமது வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...


***இந்த வேளையில் இங்கிலாந்திலுள்ள எனது மூத்த அண்ணா திரு.க.கிருஷ்ணகுமாருக்கு எனது நன்றிகள். ஏனென்றால் இந்த ஆக்கத்தை முதலில் எழுதியவர் அவரே.
நன்றிகள் கோடி.
இந்த ஆக்கம் சிறப்பாக இருந்தால் அந்தப்பெருமை எனது அண்ணாவைச் சேரும், இரசிக்கும்படி இல்லை என்றால் அந்தப் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர் எழுதியதில் சில மாற்றங்கள் செய்தேன்.