க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

4 பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வு ஒன்றிற்காக ஒரு வனப்பிராந்தியத்தைப் பார்வையிட சென்றிருந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அவர்களுக்குரிய ஆண்டுப் பரீட்சையும் இருந்தது. அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களை பெற்று விட்டு திரும்ப நினைக்கையில் அந்த வனத்தின் இயற்கை கொஞ்சும் எழில் அந்த நான்கு மாணவர்களையும் கவர்ந்து விட ஒரு மாணவன் சொன்னான், 'எம்மிடம் தான் கார் உள்ளதே நாம் இரவு இங்கே தங்கிவிட்டு நாளை அதிகாலை புறப்பட்டு சென்றாலென்ன?'. மற்றவர்களுக்கும் அது பிடித்து விட அதிகாலை நேரத்துக்கே எழுந்து செல்வதென்ற முடிவோடு நித்திரைக்குச் சென்றனர். எழில் கொஞ்சும் வனத்தின் சில்லென்ற தென்றல் அவர்களை வருட அவர்கள் தங்களை மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நித்திரையை விட்டு எழ வேண்டிய நேரத்தை கடந்து நிறைய நேரங்களின் பின்னர் நித்திரையை விட்டு எழுந்து நிலைமையை உணர்ந்து விட்டு விரிவுரையாளரிடம் பொய் சொல்லி சமாளிப்பது என்று பொய்யொன்றையும் தயார் செய்து கொண்டு பல்கலைக்கழகம் சென்றனர். அங்கு சென்று விரிவுரையாளரிடம், 'சேர் நாங்கள் ஆய்விற்காக காட்டுப்பகுதிக்கு சென்று திரும்பும் போது காரின் ரயரில் ஓட்டை ஏற்பட்டதால் அதை சரிசெய்து எடுத்து வர நேரமாகிவிட்டதால் பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை. ஆய்வுத் தேவைக்காகவே சென்றதால் தயவுசெய்து எங்கள் நால்வருக்கும் வேறு ஒரு பரீட்சை ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டனர். விரிவுரையாளரும் நாளை வாருங்கள் உங்களுக்கு புதிய பரீட்சை வைக்கிறேன் என்றுவிட்டு சென்று விட்டார். மாணவர்களுக்கோ தங்கள் பொய் வேலை செய்து விட்டதால் ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு விடுதிகளுக்கு சென்று மறுநாள் வந்தனர்.
விரிவுரையாளர் நான்கு மாணவர்களையும் தனித்தனி அறைகளில் இருத்திவிட்டு பரீட்சை வினாத்தாளை விநியோகித்தார். முதலாவது வினாவை வாங்கிப் பார்த்தார்கள். 'ஆவர்த்தன அட்டவணையில் முதலாவது மூலகம் யாது?' என்பதே முதல் வினா. அதற்கு கீழே அந்த வினாவிற்கு 5 புள்ளிகள் என்று எழுதப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவருக்கம் ஒரே மகிழ்ச்சி. ஐதரசன் என்பதை விடையாக எழுதிவிட்டு 5 புள்ளிகளுக்கு இவ்வளவு இலகுவான வினாவா என்று கீழே பார்த்தனர் அதற்கு கீழே '95 புள்ளிகளுக்கான வினாவிற்கு மறுபக்கம் திருப்பவும்' என இடப்பட்டிருந்தது. மாணவர்களும் ஆர்வமாக மறுபக்கம் திருப்பினர்.
அடுத்த பக்கத்தில் 95 புள்ளிகளுக்கான வினா என தலைப்பிட்டு கேட்கப்பட்டிருந்தது 'நீங்கள் வந்த காரின் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது?' என்று. அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது தாங்கள் எந்த சில்லின் ரயருக்கு ஓட்டை ஏற்பட்டது என்பதை முன்னரே கதைத்திருக்கவில்லை என்பது. பிறகென்ன மாட்டிக் கொண்டார்கள்.
இந்த கதையை நல்ல விதமாக எடுப்பவர்கள் பொய் சொல்லக் கூடாது என்று நினைப்பார்கள், வேறு சிலர் பொய் சொல்லும் போது எல்லாவற்றையும் திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் என்ற படிப்பினையை எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் இவர்கள் மகாத்மா காந்தியின் நண்பரொருவரின் பரம்பரையினர்.
(பெருமையாக நினைக்க வேண்டாம். மாகாத்மா காந்தியும் அந்த நண்பரும் அரிச்சந்திரன் நாடகத்தை பார்க்கச் சென்றார்களாம். நாடகம் நிறைவடைய இந்த நாடகத்திலிருந்து என்ன விடயத்தை பெற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு மகாத்மா காந்தி சொன்னாராம் 'உண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். இன்றிலிருந்து இனி பொய் சொல்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன்' என்று. அந்த நண்பர் சொன்னாராம் 'அவசரத்துக்கு பொண்டாட்டியையும் அடகு வச்சக்கலாம் எண்டத படிச்சுக் கொண்டன்' என்று.)

0 பின்னூட்டங்கள்: