எனது அண்ணாவின் செல்வ மகன் ஹரிஷ் லக்ஷ்மன் பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் எம்மையெல்லாம் விட்டுச் சென்றுவிட்டான். அவனை விரும்பிய அனைவர் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவன் இறப்பால் வாடும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவன் பிறப்பைக் கூட முழுமையாக எல்லோரிடமும் சொல்லாத நிலையில் அவனின் இறப்புச் செய்தியை சொல்லும் விதி நமக்கு.

பத்து மாத எதிர்பார்ப்பும், பத்து நாள் மகிழ்ச்சியும், ஒரு முழுநாள் இலண்டன் வைத்தியத்தில் நம்பிக்கை கொண்ட எதிர்பார்ப்பும் சிதைந்து, சோகத்தைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு ஹரிஷ் போய்விட்டான்.
'குவிமலர் போல் விழி மூடி கண்துயிலும் ஹரிஷ் லக்ஷ்மன் - நீ,
குவலயத்தில் குறு(ம்)நாட்கள் வாழ்ந்துவிட்டுப் போனதென்ன?'
தாயார் அழுகின்றார்.
தந்தையார் உடைந்துவிட்டார்
ஆசை அக்கா தேடுகிறாள்
பேரர்கள் அழுகின்றார்
பேர்த்திகள் புலம்புகின்றார்.
பூட்டிகள் கூட புலம்பி அழுகின்றார்
மாமன்கள், மாமியர்கள்
பெரியப்பர்கள், பெரியம்மாக்கள்
சித்தப்பர்கள், சித்திமார்கள்
அண்ணன்கள், அக்காக்கள்
மைத்துனிகள், மச்சான்கள்
உற்றார், உறவினர்கள்
எல்லார் விழிகளிலும்
இடையறாது (கண்) நீர்வீழ்ச்சி!
எங்கே போனாயடா?
எங்கள் ஹரிஷ் லக்ஷ்மன்…
இறைவனிடம் கேட்டுவிட்டு
இனிமேல் பிறப்பாயா
எங்கள் கிருஷ்ண தயாவிற்கு?
ஆற முடியவில்லை@ ஆற்றுவார்க்கும் கூட –
தேற்ற முடியவில்லை.
தெரிந்தவரும் அறிந்தவரும்
தேற்றுகிறார்…
ஹரிஷ் வக்ஷ்மன் தெரிகிறதா?
திரும்பி வாடா எம் செல்வா…!
பத்து மாதங்கள் தாயின் மணிவயிற்றில் வளர்ந்து, வைத்தியர்களின் கணிப்பிற்கு
பத்து நாட்கள் முன்னர் பிறந்து,
பத்து நாள் மகிழ்வில் தாய் தந்தை உற்றார் உறவினரை திளைக்கவைத்து
ஒரு நாள் நோயில் உயிர்துடிக்க மறைந்து- மீண்டும்
பத்து நாட்கள் வாடாமலராக பேழையுள் கிடந்து காட்சி தந்து
இன்று மண்ணுள் ஆழ்ந்து மூலப் பிரகிருதியுடன் ஒன்றாய்க் கலக்கும்
எம் செல்வனின் ஆத்மா இறைவன் திருவடியடைந்து இன்புற்றிருக்க வேண்டிப்
பிரார்த்திப்பதே எம் கடன்.