தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது 'இருக்கிற' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர் போலியான பதிவர்கள் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
சந்திப்பில் ஒல்லாந்தர் காலத்தில் தங்கள் கடைசிப் பதிவை இட்டுவிட்டு இன்றும் தங்களை பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அழைத்துக் கொள்ளும் யோ என்று கத்தும் பதிவரும், பிரபலமான தொடரூந்துச் சேவையொன்றை நடத்துபவர்களில் ஒருவரும், கிங்கொங் பதிவரும் முன்னாள் பதிவர்கள் என்ற வகையில் கலந்து கொண்டார்கள்....
இவர்களைத் தவிர எழுமாற்றாக அறுவடை செய்பவர்களை அறுவடை செய்யாமல் அடித்துத் துரத்திய படுபாவிப்பதிவரும், அடிக்கடி ருவிற்றரில் இருப்பவர்களை மொக்கையர்கள் என்று அழைத்துவிட்டு பேஸ்புக்கில் நண்ப'னு'டன் (அப்படித் தான் சொல்லிக் கொள்கிறார்கள்) அரட்டையடிக்கும் இளமைப்பதிவரும், பஞ்சாப்பில் பிரீட்டி ஜிந்தா என்ன செய்கிறார் என்றும் அவர் தனது விருப்புக்குரிய விசயமுள்ள நடிகரோடு சோடி சேர வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்யும் மதிப்புக்குரிய பதிவரும், பழைய காலப் பெட்டிகளில் பதிவிடும் மற்றும் தனது புதியவகைத் தலைமயிர் ஸ்ரைலை நல்லாயிருக்கு எண்டு மூடநம்பிக்கையில் திரியும் பதிவரும், இவரோடு கொள்கையில் (முக்கியமாக சினிமாவில்) நன்றாக ஒத்துப் போகும் வவுனியாவை விரும்பும் பதிவரும், படங்களுக்கு கொமன்ற் போட்டு ஆப்பு வைக்கும் மூன்று கோணத்திலுள்ள மலைப் பதிவரும், கிங்கொங் பதிவரால் மொக்கைக் கவிஞர் என பாராட்டப்பட்டதால் அடிக்கடி கவிதைகளை எழுதிவரும் வைத்தியப்பதிவரும், தமிழையும் விசயமானவரையும் விரும்பும் புயலை, காற்றை வெறுக்கும் பதிவரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பு நடைபெற்ற இடத்தில் எலிகள் காணப்படும் என்ற பயத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்த ஆ!ஸ்கீறீன் என்று கத்தும் பதிவருக்கு சந்திப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உம்பா, மாடு, பையன், சாராயம் என்று அடிக்கடி சொல்லும் 'பொறிமுறைப்' பதிவரும் அவரது தோட்டம் செய்யும் அண்ணாவும் சற்றுப் பிந்தியே சந்திப்பில் கலந்து கொண்டாலும் பதிவர்களுக்கு விளங்காத நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
சந்திப்பில் முதலில் சீரியஸ் பதிவுகளை எழுதுவது எப்படி என்று எழுமாற்று அறுவடையை தடுத்த படுபாவிப் பதிவர் விளக்கமளித்தார். எந்த விடயத்தையும் சீரியஸாக எடுக்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தான் சிறிது காலத்துக்கு முன்னர் எழுதிய மொக்கைப் பதிவொன்றிற்கு போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லி விம்மி விம்மி அழுத படுபாவிப் பதிவரை தாடியை விரும்பும் பேஸ்புக் பதிவர் தேற்றினார். அத்தோடு அனைவரும் படுபாவிப் பதிவரை மொக்கைப் பதிவுகளையும் அவ்வப்போது எழுதுமாறும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் எழுந்த பிரீட்டி ஜிந்தாவை விரும்பும் பதிவர் பயனேயில்லாமல் பதிவெழுதுவது எப்படி என்று விளக்கமளித்தார். சமூகத்துக்கு வேண்டியதை பதிவர்கள் ஒருபோதும் எழுதக்கூடாது என்றும் பதிவர்கள் சுயத்தை இழந்தாலே அவ்வாறு பிரயோசனமில்லாமல் எழுதமுடியும் என்றும் கருத்துத் தெரிவித்தைதை கிங்கொங் பதிவர் விழுந்து விழுந்து வரவேற்க முயன்றதால் அப்பகுதியில் நிலநடுக்க, சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அத்தோடு மொக்கைப் பதிவுகள் எழுதவே கூடாது என்றும் சீரியஸானவற்றையே எழுதவேண்டும் என்று விளக்கமளித்தார்.
அடுத்தாக ஆண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் பேஸ்புக் புகழ் இளமைப் பதிவர் உரையாற்றினார். பதிவுலகத்தில் ஆண்களுக்கு இருக்கும் வரவேற்பைவிட பெண்களுக்கு வரவேற்புகளும், பின்னூட்டங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன என்று கூறிய இவர் காதல் நல்லது என்றும் அதில் தனக்கு அனுபவமே இல்லை என்றும் நகைச்சுவைகளை அள்ளிவீசினார்.
தான் தனது ஒவ்வொரு பதிவிலும் முழுமையாக ஆடையணிந்த ஆண்களின் புகைப்படங்களை இடுவதன் மூலம் ஆணியக் (பெண்ணியத்துக்கு எதிர்ச் சொல்லாம்) கருத்துக்களைப் பரப்புவதாகவும் பெருமையுடன் கூறிக் கொண்டார். அததோடு தான் இன்று பழைய ரீ-சேட்டை அணிந்து வந்தது ஆண்கள் சிக்கனமானவர்கள் என்ற கருத்தை விளங்கப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டார்.
பேஸ்புக் பதிவர் சீரியஸாய்க் கதைத்ததால் அனைவரும் கடுப்பாகியதால் அனைவருக்கும் சூட்டுநாயும், பீச்சாக்களும் சாப்பிட வழங்கப்பட்டதோடு வைன், ஜின், விஸ்கி உட்பட்ட எனக்குப் பெயர் தெரியாத இன்னோரன்ன குடிபானங்களும் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட சூட்டுநாய்களையும், பீச்சாக்களையும் தாங்களே வீட்டில் தயாரித்ததாக சாராயப் பெயருடைய சகோதரரர்கள் கருத்துத் தெரிவித்ததால் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட விஸ்கி, வைன் போன்றவற்றை தாங்களே காலைப்பயன்படுத்தி தயாரித்ததாக பெட்டிப்பதிவரும் இன்னும் சிலரும் தெரிவித்ததைத் தொடர்ந்து பலருக்கு ஏற்பட்ட வாந்திகளை (வாந்தி தான். எழுத்துப்பிழை எதுவும் இல்லை) அடக்கிக் கொள்ள புத்திசாலியான பேஸ்புக் பதிவர் தேசிக்காய் வழங்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தைத் தவிர்க்க பெரிதும் உதவினார்.
இதன்பின்னர் கூகுள் குழுமத்தை பயனில்லாமல் எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பெட்டிப் பதிவர் விளங்கப்படுத்தினார்.
தான் குழுமத்தை சிரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதுவே சிறப்பானது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பாரம்பரிய உபகரணங்களை இளைய சமுதாயம் மறந்துவருவதால் அவற்றை இளைய சடுதாயத்திற்கு ஞாபகப்படுத்த புதிய கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு தான் கம்பஸ்ஸில் வாளி போடுவதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும் யாரும் அதைப் பற்றி குழுமத்தில் வாயைத் திறக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். அப்படிச் செய்யின் அவர்களுக்கு கறுத்த வான் அனுப்பப்படும் என்று மிரட்டினாலும் எழுந்த கிங்கொங் பதிவர் 'விம் இருக்கப்பயமேன்?' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.
இடையே எழுந்த படுபாவிப்பதிவர் தான் கணக்குவிடுவதில் வல்லவர் என்றும் தான் தரம் 6 இல் கணித பாடத்துக்கு 53 புள்ளிகளைப் பெற்றேன் என்றும் அதனால் பதிவர் சந்திப்புத் தொடர்பான கணக்கு விடுவதைத் தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதன்பின்னர் இறுதி அம்சமான பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை கிங்காங் ஆரம்பித்துவைத்து தான் அதிகமாக பின்னூட்டுவதை விரும்புவதில்லை என்றும் ஒரு பதிவுக்கு தலா ஒவ்வொரு பின்னூட்டம் மட்டுமே இடுவதை வலியுறுத்துவதையும் கேட்ட பெட்டிப்பதிவர் கடுப்பாகி கிங்கொங் பதிவருக்கு அடிக்கச் சென்றதோடு தன்னை இவர் ஒரு குழுவோடு ஓட ஓட விரட்டி 405 பின்னூட்டங்கள் போட்டதாகவும் இவர் பின்னூட்டமிடுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
எனினும் கோபத்தோடு எழுந்த பேஸ்புக் பதிவர் தனது பதிவுகளை விட தனது தளத்தில் பின்னூட்டங்களிற்கே அதிக வரவேற்பு இருப்பதாக ஒரு இரகசிய அறிக்கை கிடைத்திருப்பதாகவும் அதனால் பின்னூட்டவாதிகள் யாரையும் தான் இழக்கவிரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பின்னூட்டங்களில் தாடிகள் பற்றிப் புகழ்ந்து பின்னூட்டமிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறான ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்குப்பின்னர் மண்டபத்துக்குள் இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாடப்பட்டது.
அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
மறுதலிப்பு 1: இது முற்றுமுழுதாக நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.
மறுதலிப்பு 2: இறுதியாக வெற்றிகரமாக நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பு 2 இனை கேவலப்படுத்தும் எண்ணமும் கிடையாது.
|