கிறிக்கெற் என்பது நம்மவர்களுக்கெல்லாம் தேசிய விளையாட்டாக மாறிப் போனாலும் கிறிக்கெற் பற்றி பதிவிட்டால் அதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுப்பவனா நான்?
யார் என்ன சொன்னாலும் விடமாட்டேன் என்று தொடர்ந்து நகைச்சுவைப் பதிவுகளைத் தானே எழுதுகிறேன். என்னால முடிஞ்சத தானே எழுத முடியும்?
சரி... விடயத்துக்கு வருவோம்...
திறமை இருந்தும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்காத அல்லது பிரகாசிக்க முடியாமல் போன வீரர்களைப் பற்றி ஓர் பதிவிட வேண்டும் என்று நிறைய நாளாக ஆசை இருந்தது.
இதோ...
பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
இலங்கையில் இருந்து ஆரம்பிப்போம்... (ஓரளவு தற்போதைய கால வீரர்களைத் தான் கணக்கிலெடுக்கிறேன்)
1. சாமர கப்புகெதர
வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.
எனினும் இன்னும் சிறுவயது என்பதால் மீண்டு வருவார் என நம்புவோம்.
2. இந்திக்க டீ சரம்
வலதுகைத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான இவர் இலங்கை அணியில் இடம்பெறும் நோக்கில் சிறிது காலத்திற்கு முன்னர் விக்கெட் காப்புப் பணியை விட்டுவிட்டடு தனியே துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடித்தாடும் வீரரான இவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்.
எனினும் அரசியல் காரணங்களாலோ என்னவோ தொடர்நதம் அணியில் இடம் வழங்க மறுக்கப்படுகிறார்.
இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் இலங்கையில் நடந்த இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்த போதிலும் டில்ஷானால் கடை மத்தியநிலை (ஆறாம் இடத்தில் என்று நினைக்கிறேன்) வீரராக மாற்றப்பட்டு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்காமல் வெறும் களத்தடுப்பாளராக விளையாடினார்.
இம்முறை இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தில் பதினொருவரி்ல் இடம் கிடைக்கவில்லை. சாமர சில்வா தொடர்ந்து பிரகாசிக்காமல் விட்ட போதிலும் இவரை விளையாட அனுமதிக்கவில்லை.
இவரது தந்தை ஓர் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பதால் தான் இந்த நிலை என அறிய முடிந்தது.
இப்போது 36 வயதாவதால் இவரை இனி அணியில் சேர்ப்பார்களா தெரியவில்லை.
3. மாலிங்க பண்டார
கிறிக்கெற் விளையாடுவதில் இரண்டாவது மிகக்கடினமான அம்சம் எனக்கருதப்படும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான இவர் பல காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. (முதலாவது கடின அம்சமாக விக்கெட் காப்புப்பணி கருதப்படுகிறது)
அதிகளவான வித்தியாசமான பந்துவீச்சு வகைகள் (variation) இல்லாததால் முன்னரே ஓரளவு கணிக்கப்படக் கூடியவராக (predictable) மாறியதும் ஓர் காரணம். (Wrist spinner's some variations - google, flipper, zooter)
அத்தோடு பந்தை அதிகளவு திருப்பும் தன்மையும் இவரிடம் இல்லை.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிறிக்கெற் என்பது துடுப்பாட்ட வீரர்களது விளையாட்டாகிவிட்டதால் ஓட்டங்களை மட்டுப் படுத்துவதே சுழற்பந்து வீச்சாளர்களது பிரதான பணியெனக் கருதப்படும் நிலையில் இவர் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்ற போட்டிகளுக்கு சிறந்தவர் என்ற போதிலும் முரளி, மென்டிஸ், ஹேரத் ஆகியோர் இவரை விட முன்னிலையில் நிற்பதால் வாய்ப்புக் கிடைக்காது தவித்து வருகிறார்.
இனி இந்தியா
1. ஸ்ரீசாந்
சிலர் நான் நகைச்சுவை செய்கிறேன் எனக் கருதலாம்.
ஆனால் உண்மையில் ஸ்ரீசாந் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்.
Seam position எனப்படும் பந்தின் நூல்ப்பகுதியின் அமைவு என்பது வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கவனித்தப் பார்த்தீர்களானால் இவரது Seam அமைவு சிறப்பாக அமையும். (அதாவது பந்து ஆடுகளத்தை அடிக்கும் போது ஓரளவுக்கு நேராக அடிக்கும். அதிகளவுக்கு சுழராது. Scramble seam எனப்படும் ஓர் வகை இருந்தாலும் இது ஒரு வகை variation ஆகவே கருதப்படுகிறது.)
எனினும் இவரது திரும்பும் பந்துகள் (Swing) துடுப்பாட்ட வீரருக்கு நன்றாக திரும்புவதால் இவரது திரும்பலை அடையாளம் காணமுடிவதாக அலன் டொனால்ட் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிய மாற்றமொன்றை செய்தால் இதை நிவர்த்திக்க முடியும். (வேகப்பந்து வீச்சின் இரகசியமாக கருதப்படுவது பந்து பிந்தி திரும்புதல், அதாவது late swing)
ஆனால் இதைவிட இவரது தனிப்பட்ட நடத்தைகள் தான் இவரை அதிகளிவில் பாதித்தன.
எளிதாக உணர்ச்சி வசப்படும் இவரது குணத்தால் தன் கட்டுப்பாட்டை மீறுவதால் இவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டுள்ளது.
(அன்ட்ரூ நெல்லின் பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அடித்து விட்டு ஆடுகளத்தில் துடுப்பைச் சுற்றிச் சுற்றி இவர் ஆடிய ஆட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.)
2. முனாப் பட்டேல்
தனிப்பட்ட ரீதியில் எனக்கு முனாப் பட்டேலை மிகப் பிடிக்கும்.
கவனித்துப் பார்த்தீர்களால் இவரது பந்துவீச்சுப் பாணியும் கிளெய்ன் மக்ராத்தின் பந்துவீச்சுப் பாணியும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும்.
அருமையான line and length இல் பந்து வீசக் கூடிய திறமையுள்ளவரான இவர் விக்கெட் எடுப்பதற்கு தேவையான திரும்பல் திறனையும் கொண்டவர்.
முதலாவது மாற்ற பந்துவீச்சாளராக (first change bowler) பந்துவீசுவது என்பதொன்றும் இலகுவான விடயமல்ல.
பந்து ஆரம்ப நிலையைப் போல பெரிதாகக் திரும்பாது. (less swing)
பெரிதான Seam movement உம் இருக்காது.
ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டால் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது என்றும், ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினால் ஓட்டங்களை கட்டுப்படுத்துவது என்றும் இவர்களது வேலை மாறிக் கொண்டேயிருக்கும்.
முதலாவது பந்துவீச்சாளர்களாக இருந்து ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக மாறிய பின்ரே உமர் குல், மிற்செல் ஜோன்சன் ஆகியோர் நிறைய இலக்குகளை கைப்பற்றத் தொடங்கினர்.
இந்தியாவின் சிறந்த முதலாம் மாற்றப் பந்துவீச்சாளர் என ஜவகல் ஸ்ரீநாத் இனால் புகழப்பட்டவர்.
எனினும் காயங்களால் நிறையவே பாதிக்கப்பட்டவர். காயத்தால் பந்துவீச்சு வேகமும் சற்றுக் குறைந்தது.
இப்போது தான் அணியில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறார். பார்ப்போம்....
3. ரோகித் சர்மா
முதலாவது ஐ.பி.எல் இன் பின்னர் அடுத்த ரெண்டுல்கர் எனக் கருதப்பட்டவர்.
எனினும் இவர் இருபதுக்கு 20 போட்டிகளையே பெரிதும் விரும்புகிறார்.
ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை.
இவரொன்றும் இறுக அடித்தாடும் துடுப்பாட்ட வீரர் (hard hitting batsman) அல்ல.
இவரைப் போன்ற ஆட்டமுறையைக் கொண்டவர்களை classy batsman என அழைப்பர். (மகேல, ரெண்டுல்கர், மார்க் வோ, ட்ராவிட், சமரவீர, பொன்ரிங் போன்ற பிரபலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.)
இவரிடம் நல்ல technic இருந்த பொதிலும் இருபதுக்கு 20 போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் போனதற்கு இவரின் மனப்பாங்கை (temperament) ஐ இவர் சரியாக கட்டுப்படுத்தாமை தான் காரணம் என கருதப்படுகிறது.
4. ரொபின் உத்தப்பா
தனது முதல் போட்டியில் இங்கிலாந்துக்கெதிராக 86 ஓட்டங்களை எடுத்து இந்திய துடுப்பாட்ட வீரரொருவர் தனது முதல் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் எடுத்த அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
அத்தோடு இந்திய அணி சார்பாக சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அரைச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
ஓரளவு வழமையான அடிகள் மூலம் (orthodox shots) மூலம் ஓட்டங்களைக் குவிக்கும் திறனுள்ள இவருக்கும் temperament பிரச்சினை இருப்பதால் இதுவரை சர்வதேச ரீதியில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இன்னும் வயது இருப்பதாலும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் பின்னர் பல சிரேஷ்ர வீரர்கள் ஓய்வுபெறுவார்கள் என்பதாலும் சாதிக்க வாய்ப்புண்டு.
அப்படியே கிறிக்கெற் பற்றி பெரிதாக தெரியாதவர்களுக்காக,
temperament என நான் குறிப்பிட்டது, ஒரு துடுப்பாட்ட வீரர் துடுப்பாட்ட வீரர் ஒருபுறத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது விக்கெட்டுக்கள் மறுபுறத்தில் சரிந்தாலோ அல்லது பந்துவீச்சாளர் அருமையாக பந்து வீசினாலோ அல்லது பந்து வீச்சாளர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது கொஞ்சப் பந்துகளில் தொடர்ந்து ஓட்டங்கள் பெற முடியாமல் போனாலோ உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது ஆகும்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கும், தொடர்ந்து பந்துகள் எல்லைக் கோடுகளுக்கு அடிக்கப்பட்டாலோ அல்லது துடுப்பாட்ட வீரர் வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டாலோ அல்லது பிடிகள் தவறவிடப்பட்டாலோ எரிச்சலடையாமல் பொறுமையைக் காத்து தொடர்ந்து சரியாக பந்து வீசுதல்.
(பகுதி இரண்டில் பாகிஸ்தான் வீரர்களும், ஏனைய வீரர்களும்.)