க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பதிவிற்கு முன்பு நான் சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...
நான் நாத்திகக் கருத்துக்களைக் கொண்ட ஆத்திகன்.
எமக்கு மேலான சக்தியை நம்புகின்ற போதிலும் மதங்களையும், வழிபாடுகளையும் தேவையில்லையென்று கருதுகின்றவன்.

எனது அக்காவிற்கு தரம் 2 இல் படிக்கின்ற ஓர் மகள் இருக்கின்றாள். கொழும்பில் இருக்கின்ற பிரபலமான மகளிர் பாடசாலையில் கல்விகற்கிறாள்.
சிலநாட்களுக்கு முன்னர் அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்.
8 வயதான அந்தப் பிஞ்சு மனதில் ஓர் ஆசிரியை எவ்வாறு அப்படியான ஓர் மதத்திணிப்பை அல்லது போலி கடவுள்களை திணிக்கலாம் என்பது தான் எனது கேள்வி.
இது அம்மா பகவான் என்பவருக்கு எதிரான ஆக்கமல்ல. அவரை பின்பற்றுபவர்களுக்கு எதிரான ஆக்கமுமல்ல. அந்த நம்பிக்கையை மற்றவர்களிடம் திணிக்க எத்தனிப்பவர்களுக்கு எதிரானதே ஆகும்.

8 வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே?

நீங்கள் சிவபெருமானின் படத்தைக் கொடுத்துவிட்டிருந்தால் வேறுவிடயம். அந்தக் குழந்தை சைவசமயத்தை பின்பற்றுகிறது. ஆகவே அது பிழையானதல்ல.
ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஓர் விடயத்தை எவ்வாறு திணிக்கலாம்?

சில காலங்களுக்கு முன்னர் நான் இந்த அம்மா பகவான் பற்றி ஆராய்ந்த போது எனக்கு சில விடயங்கள் அறியக் கிடைத்தன.
அவரின் உண்மையான பெயர் விஜயகுமார் என்றும் அவர் இந்தியாவின் அரச காப்புறுதி நிறுவனமொன்றில் முகவராக பணிபுரிந்தார் என்றும் அங்கிருந்து பணமோசடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட இன்னொரு நிறுவனத்தை தான் தொடங்கினாரென்றும் அங்கும் பணமோசடி செய்து காவல்துறையினரால் தேடப்பட பின்னர் இந்த கடவுள் வேடத்துள் நுழைந்தார் என்றும் அறிய முடிந்தது.
அத்தோடு 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் அறியக் கிடைத்தது.

சிலவேளை இந்தத் தகவல்கள் முழுமையாக உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவரது இயற்பெயர் விஜயகுமார் என்பதும், அவர் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதையும் அவரது பக்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் காப்புறுதி நிறுவனத்திலிருந்து தானாக விலகியதாகவும், அவர் புதிய நிறுவனம் தொடங்கியமை உண்மை என்றும் ஆனால் அங்கே பணமோசடி நடைபெறவில்லை என்றும் கூறினார்.
1990 இல் காவல்துறையினர் அவரை பெண்கள் துஷ்பிரயோகத்திற்காக கைதுசெய்ய முயன்றார்கள் என்றும் ஆனால் கைதுசெய்யவில்லை என்றும் மறுத்தார். (விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்!)

ஆகவே நான் மேலே கூறியவை உண்மையாக இருக்கலாம்.

ஆனால் இவரைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது ஓர் ஆசிரியர் உண்மை நிலை தெரியாமல் எவ்வாறு செயற்படலாம்?
ஆகக் குறைந்தது அந்தக் குழந்தையின் பெற்றோரின் அனுமதி பெறப்பட்டதா?

ஏன் இவ்வாறு ஓர் சமூகத்தை பிழையான வழியில் செலுத்த முயல்கிறீர்கள்?

இதே போன்றதொரு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு நேரடியாக நடந்தது.
இலங்கையிலுள்ள ஆன்மிக நிறுவனமொன்று (ஒருவகை மிஷன்) வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு உணவு, உடைகளை அனுப்பியது. அந்த குழுவில் என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அந்தப் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கமைய அங்கே சென்றேன்.
(நான் இரண்டு நாட்கள் அதுவும் அரை நாட்கள் தான் செய்தென். அந்த நண்பர்கள் ஏராளமான நாட்களாக அந்தப் புனிதமான பணியை செய்தார்கள். என்னை விளம்பரப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.)

மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து பொதிசெய்வது தான் அந்த வேலை.
அந்தப் பொதியில் நிறையப் பொருட்களை வைத்தார்கள்.
ஆனால் அத்தோடு விபூதி உட்பட சில பொருட்களையும், சில சுவாமிப் படங்களையும், சில சுலோகங்களை கொண்ட கடதாசிகளையும் வைத்தார்கள்.
நான் அந்த நண்பனிடம் கேட்டேன், 'எல்லாம் செய்கிறீர்கள் சரி. ஆனால் ஏன் அந்த விபூதி உட்பட்ட சமயப் பொருட்கள். அந்த மக்களில் வேறு சமயத்தவர்கள் இருக்கமாட்டார்களா? நாத்திகர்கள் இருக்கமாட்டார்களா? அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி நீங்கள் சமயத்தை அந்த மக்களிடம் திணிக்கிறீர்கள் அல்லவா? ஆங்கிலேயர்கள் எம்மை ஆண்டுவிட்டு எம்மிடம் ஆங்கிலத்தையும் அவர்களது சமயத்தையும் திணித்துவிட்டுச் சென்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? கிறிஸ்தவர்கள் மதமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்றேன்.
நண்பர் விடை சொல்லவில்லை. அவரால் முடியாது. ஆனால் அவர் வெறும் தொண்டர் தான். தலைகள் தான் இவற்றிற்கு பதிலளிக்க வேண்டும்.

குறிப்பு: எந்த மதங்களையோ, அவர்களின் நம்பிக்கைகளையோ கேவலப்படுத்தும் நோக்குடனோ அல்லது எந்த தனிநபர்களிற்கு எதிராகவோ இந்தப் பதிவை இடவில்லை.
நண்பர்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் உங்கள் பெயர்களுடன் பதிலளியுங்கள். பெயரை சொல்ல விரும்பாவிடின் பெயரில்லாமல் சொல்லுங்கள். ஆனால் இழிசொற் பிரயோகம் வேண்டாம். ஏற்கனவே இருமுறை நண்பரொருவர் இழிசொற்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் முன்னைய ஆக்கங்களில்.