பதிவர் சுபாங்கன் என்னை அழகு, காதல், பணம், கடவுள் என்ற தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.
எனக்கு உண்மையிலேயே என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
ஆனால் தந்த அழைப்பிற்காக எழுத வேண்டுமே... அது தான்...
அழகு....

எல்லாமே அழகு தான்...
என்னைப் பொறுத்தவரை நான் விரும்பும் எல்லாமே அழகு தான்.
ஐஸ்வர்யாராஜ் அல்லது ஏனைய உலக அழகிகள், உலக அழகர்கள் எனக்கு அழகாகத் தெரியமாட்டார்கள்... ஆனால் இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட, மற்றவர்கள் அழகில்லை என நினைக்கும் ஒருவர் எனக்கு பேரழகியாக, பேரழகனாகத் தெரிவர்...
எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எவருமே எனக்கு பேரழகர்கள், பேரழகிகள் தான்...
யாரையும் இதுவரை அழகன், அழகி என்ற பார்வையில் வேறுபடுத்தியது கிடையாது. இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.
அழகு எங்குமில்லை, அன்பில் தான் இருக்கிறது.
சிறுகுழந்தை பொதுவாக எல்லோருக்கும் அழகாகவே தெரிகிறது. அது ஏன்?
ஏனென்றால் அந்தக் குழந்தையை நீங்கள் எதிரியாக நினைப்பதில்லை, அந்தக் குழந்தையிடம் கெட்ட பழக்கங்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே அந்த எண்ணம் தானாகவே அன்பை ஏற்படுத்துகிறது. அந்த அன்பு உங்களை அந்தக் குழந்தையை அழகாகக் காட்டுகிறது.
வளர்ந்த பின்னர் ஒவ்வொருவரும் பிழை செய்ய ஆரம்பிக்கும் போது அந்தப் பிழைகள் எம் கண்முன்னே வருவதால் சிலர் அழகில்லாமற் தெரிகிறார்கள்.
அன்னை தெரேசாவின் முகத்தை உற்றுப் பாருங்கள்... பேரழகியாத் தெரிவார்.
காதல்...

பச்சிளம் குழந்தையிற்ற கேக்கிற கேள்வியா இது?
சரி சரி...
முட்டாளை அறிஞனாக்கும், அறிவாளியை முட்டாளாக்கும் என்று சொல்வார்கள்.
புற அழகில் வரும் காதலை விட உண்மையான அன்பில் வரும் காதல் மேல் நம்பிக்கையுள்ளவன்.
(இது பயங்கர சுயநலம்... ஏனென்டா அழக பாத்து காதலிக்கிறது எண்டா என்னயெலல்லாம் யாரும் காதலிக்க மாட்டாங்க தானே? ;) )
காதலர்கள் பொய்யர்களாக இருந்தாலும், காதல்கள் பொய்யாக அமையாது என்பது எனது நம்பிக்கை.
காதல் இல்லாமல் இங்கு யாரும் இல்லை என்பேன். சிலர் வெளிப்படுத்திக் கொள்வார்கள். பலர் வெளிப்படுத்துவதில்லை.
எனக்குக் காதல் பிடிக்கும். அந்த உணர்வு பிடிக்கும். அது ஏற்படுத்தும் இன்ப வலி பிடிக்கும்.
சில இடங்களில் நிஜவலிகளும் ஏற்படுவதுண்டு.
நடக்க ஆரம்பிக்கும் போது தான் விழுவேன் எனக் குழந்தைக்கு தெரிவதில்லை.
காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும் அது வலிகளையும் தரும் என்பதும் புரிவதில்லை.
'உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன்... மரணம் கண்முன்னே வருகிறது...'
இது நான் எழுதிய வரிகள்... (கவிதை எண்டு சொன்னா எங்க கவிதய காணேல எண்டு மொக்கை போடுவீங்க தானே? அது தான்)
'உன்னுள் என்னை நான் தொலைத்தேன்...
நீ அருகே இல்லாதபோது என்னைக் கண்டுபிடித்தேன், மறுபடி தொலைக்கும் ஆசையில்'
பணம்...

பணமின்றி வாழ்க்கையில்லை...
ஆனால் பணமே வாழக்கையில்லை...
அடிக்கடி எனக்கு நானே, சிலவேளைகளில் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லும் வரிகள் இவை.
(Money is a must for life, but money isn't the life)
வீட்டில் அடிக்கடி நகைச்சுவையாக 'காசென்ன காசு... இண்டைக்கு வரும்.. நாளைக்கு போகும்' என்று சொல்லிக் கொள்வேள்.
ஆனால் பணமின்றி எதுவுமே இல்லை என்பது எனக்குத் தெரியும்.
பணத்தை நோக்கியே உலகம் அசைகிறது.
இன்னொருவரின் இரத்தத்தைக் குடிக்காத, இன்னொருவரின் கண்ணீரோடு வராத பணம் என்றென்றும் எனக்கு வேண்டும்.
கடவுள்...

கடவுள்...!!! இதுவரை கண்டதில்லை என்கிறார்கள் பலர். ஆனால் பலமுறை கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன்...
மக்கள் கஷ்ரப்படும் போது அவர்களுக்கு உதவும் எல்லோருமே கடவுளர்கள் தான்.
ஆனால் மதங்களையும், வழிபாடுகளையும் வெறுக்கிறேன்.
மதங்கள் இல்லாவில் இந்தியாவில் ஏன் அடிக்கடி கலவரங்கள் ஏற்படப்போகிறது?
மதங்கள் வேண்டாம். கோவில்கள் வேண்டாம்.
மனிதம் மட்டும் போதும்.
உணராத ஒருவிடயத்திற்காக நம்மிடையே சண்டைகள் வேண்டாம்.
எனக்கு மேல் உள்ள சக்தியை நம்புகிறேன். அதைத் தான் கடவுள் என்கிறார்கள். ஆனால் மதங்களை நம்பவில்லை, வெறுக்கிறேன்...
ஒரு மதத்தில் சரியென்று சொல்லப்படுகின்ற விடயம் இன்னொரு மதத்தில் பிழையெனப்படுகிறது.
ஆகவே எங்கேயோ பிழை இருக்கிறதல்லவா...???
(திரும்பவும் மதங்கள் தொடர்பான வாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.)
**************************************************************************
இப்போது தான் எனக்கு மகிழ்ச்சி...
இன்னொருவரை மாட்டிவிடுவதில் என்ன ஒரு மகிழ்ச்சி...
எனக்குத் தெரிந்தவரை பொதுவாக எல்லோரும் எழுதிவிட்டார்கள்.
எனக்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை...
மீண்டும் நண்பன் இலங்கனை அழைக்கிறேன்...
நண்பர் Thevash ஐ அழைக்கிறேன். -இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரை குழுமத்தோடு இப்படியான வகையில் சேர்த்தால் அவரின் எழுத்துக்கள் மேலும் வெளிவர உதவும் என நம்புகிறேன். நண்பரே வாருங்கள்.
நண்பர் இறக்குவானை நிர்ஷனை அழைக்கிறேன் - புதிய மலையகம் என்ற இவரது சமூக சீர்திருத்த எழுத்துக்களை இரசிக்கிறேன். நண்பரே வாருங்கள்.
சகோதரி தர்ஷாயினி - ஒப்பீட்டளவில் புதியவர். (நானெல்லாம் 1 வருஷத்துக்கு மெல இருந்து குப்பை கொட்டுறன். என்னோட ஒப்பிட்டா புதியவர் எண்டு சொல்ல வந்தன்.) அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர். அன்புடன் அழைக்கிறேன்.
அழைத்த இரு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்த தொடர் பதிவை மேலும் விரிவுபடுத்துங்கள்.
உங்கள் நண்பர்களை, நீங்கள் படிக்கும் பதிவர்களை தொடர அழையுங்கள்.
குறிப்பு: நண்பர் யோ வொய்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் தான் முதலில் பிடிக்கும் பிடிக்கும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள். ஆனால் ஏதோ குழப்பத்தில் அழகு, காதல், பணம், கடவுள் தொடர்பதிவை முதலில் வந்ததென நினைத்து எழுதிவிட்டேன்.
உங்கள் தொடர்பதிவை விரைவில் பதிவிடுகிறேன்...
***********************************************************************
நிறைய நாட்களுக்கு முன்னர் வந்தியத்தேவன் அண்ணா என்னை ஊக்கப்படுத்தி விருதொன்றை தந்தார். அவர் தந்து சில நாட்களின் பின்னர் சகோதரர் சதீஷ் அவர்களும் அதே விருதை தந்திருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நானும் இதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று கிளம்பிற்றன்...
ஆனால் விருது வழங்குபவர் தனக்கு தகுதியில்லாம விருது கொடுக்க வெளிக்கிட்டா பிறகு அண்மைய தமிழக அரசின் சினிமா விருதுகள் போலாகிவிடும் என்பதால் விருது என்ற வார்த்தையை பரிசு என மாற்றிக் கொள்கிறேன்.
என் சார்பான அன்புப் பரிசை கீழ்வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே...
இறக்குவானை நிர்ஷன் - படிக்கத் தொடங்கி குறுகிய காலத்தில் வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது இவரது எழுத்துக்கள். மலையகம் பற்றிய இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் அன்புப் பரிசு.
நண்பர் இலங்கன் - ஒரே வகுப்பில் படித்திருந்தாலும் இருவரும் எழுதுவது மற்றொருவருக்கு தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்தோம் சில காலங்கள். அருமையான நகைச்சுவையாளன். அவரை வாழ்த்தி எனது அன்புப் பரிசு.
நண்பர் தேவேஷ் - புதியவர். கனடாவிலிருந்து பதிவிடுகிறார் என நம்புகிறேன். நண்பரின் கவிதைகளும், ஏனைய ஆக்கங்களும் மென்மேலும் வெளிவர அவரிடம் வேண்டிக் கொண்டு அவருக்கு என் அன்புப்பரிசு.
நண்பர்களே உங்கள் எல்லோருடைய எழுத்துக்களையும் இரசிக்கிறேன். நான் மற்றவர்களுக்கு அன்புப்பரிசு வழங்கவில்லை என்பதால் உங்கள் எழுத்துக்களை இரசிக்கவில்லை என்று அர்த்தப்படாது. மற்றவர்கள் பொதுவாக ஏற்கனவே விருது பெற்றுவிட்டார்கள் என்று நம்புகிறேன்.