க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பச்சிளம் பாலகர் சங்கத்தின் மாநாடு நடந்து கொண்டிருந்தது.
பொருளாதாரச் சிக்கல்கள், பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அப்பாவிகளான பச்சிளம் பாலகர்களான நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆராயப்பட்டன.
ஆகவே பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்.
'சரி... எங்களுக்கென்று தனிநாடொன்றை உருவாக்குவதில் பிரச்சினை இருக்காது. எம்மால் அது முடியும். ஆனால் உருவாகும் பச்சிளம் பாலகர் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது?'
உண்மையிலே நியாயமான கேள்விதான். எல்லோரும் அமைதியாக இருந்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.
அப்போது பச்சிளம் பாலகர் சங்கச் செயலாளரான யோ வொய்ஸ் எழுந்து 'நாம் தனிநாட்டை பெற்ற பின்னர் வேண்டுமென்று அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம். ஒபாமா பொறுமையிழந்து எம்மைத் திருப்பித் தாக்க கட்டளை பிறப்பிப்பார். உடனே அமெரிக்கா எங்கள் நாட்டைக் கைப்பற்றி எங்கள் நாட்டைத் தங்கள் நாட்டின் மாநிலமொன்றாக மாற்றிவிடும். அதன்பின்னர் நாம் தானாகவே முன்னேறிவிடுவோம்.' என்றார்.
இந்த அருமையான சிந்தனையைக் கேட்ட எல்லோரும் யோ வொய்ஸைப் பாராட்டியதோடு கனககோபிக்குப் பின்னர் யோ வொய்ஸை சங்கத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.
அதுவரை அமைதியாகவிருந்த பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் கனககோபியைப் பார்த்த பலரும் 'ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டனர்.
கனககோபி லேசாகச் சிரித்துவிட்டு 'அவர்கள் எங்கள் நாட்டைக் கைப்பற்றினால் நீங்கள் சொன்னபடி எல்லாம் நடக்கும். ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?' என்றார்.
அனைவரும் சிந்தித்துவிட்டு கனககோபியை 'வேண்டுமென்றே யோசிப்போர்' சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு மாநாடு நிறைவுபெற்றது.


**********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் தந்தையார் காலமாகிவிட்டார்.
அவர் துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருந்தார்.
சங்கத்தின் சார்பில் கனககோபி அவரை ஆறுதற்படுத்த அங்கே சென்றிருந்தார்.
நண்பருக்கு ஓர் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் அவர் இன்னும் அழத்தொடங்கிவிட்டார்.
'ஏன் கூடுதலாக அழுகிறாய்?' என்று தலைவர் கேட்டார்.
'இப்போது தான் என் சகோதரி அழைப்பெடுத்தார். அவரது தந்தையும் இறந்துவிட்டாராம்.' என்றார் நண்பர்.


***********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...
25 வயசில காதலிச்சா, இப்ப தான் உழைக்க தொடங்கியிருக்கிறாய் அதுக்குள்ள காதல் தேவைப்படுதோ? எண்டுறீங்க...
30 வயசில காதலிச்சா, இந்தக் கழுதை வயசில உனக்கேன்ரா காதல் எண்டுறீங்க...
நாங்க அப்ப எப்பதான்ரா காதலிக்கிறது?'

நீங்களே சொல்லுங்கோ அவர் பச்சிளம் பாலகர் தானே???


***********************************************************************************************

பச்சிளம் பாலகர் சங்கத்தின் தலைவரான கனககோபி அண்மையில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்துவிட்டார்.
எல்லோரையும் போல வெறுமனே 'I love you' என்றோ அல்லது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றோ சொல்லவிரும்பாத அவர் புதுமையாக தன் காதலை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் அந்தப்பெண் ஏன் கனககோபியை காதலிக்கத் தொடங்கினார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'

************************************************************************************************

குறிப்பு: இங்கே குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. எந்த தீய நோக்குடனும் அல்ல.
இங்கே பெயர் குறிப்பிட்ட பதிவர் சகோதரர்கள் இவற்றை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

************************************************************************************************

வீணாய்ப்போன கிறிக்கெற் வீரர்கள் பாகம் இரண்டு ஏற்கனவே தயாராகிவிட்டது. எனினும் இந்தப் பதிவின் பின்னர் பதிவிடுகிறேன்.